Published : 28 Aug 2015 09:33 PM
Last Updated : 28 Aug 2015 09:33 PM
பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்தியா மட்டுமே என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஷாஹித் ஹுசைன் சையது தலைமையிலான நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை கமிட்டியானது நேற்று ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் சென்றது. அப்போது முப்படைகளின் தலைவர் ஜெனரல் ரஷாத் மஹமூத் மற்றும் அவரது குழுவினர் நிலவரத்தை விவரித்தனர்.
10000 கோடி டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை கடந்த 2 ஆண்டாக இந்தியா கொள்முதல் செய்து குவித்து வைத்துள்ளது. இவற்றில் 80 சதவீதம் பாகிஸ்தானுக்கு இலக்காக வைத்து வாங்கப்பட்டவை. பாகிஸ்தானுக்கு இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இதேவேகத்தில் இந்தியா ஆயுதங்களை வாங்கினால் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 10000 கோடி டாலர் மதிப்புக்கு ஆயுதங்கள் அந்நாட்டில் குவியும்.
உலகிலேயே ஆயுதம் கொள்முதல் செய்வதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தனது ராணுவ செலவை அந்த நாடு இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த ஆண்டின் ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 4000 கோடி டாலர்கள் ஆகும்
எனவே நிலைமையை தொடர்ந்து மதிப்பீடு செய்து அதற்கேற்ற வகையில் நாமும் விழிப்புடன் இருந்து மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை கமிட்டியிடம் மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தகவல்களை டான் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT