Published : 09 May 2024 06:09 AM
Last Updated : 09 May 2024 06:09 AM

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியையை கத்திமுனையில் வன்கொடுமை செய்தவர் கைது

சென்னை: காற்றுக்காக கதவை திறந்து தூங்கிய ஆசிரியையை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவரை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட சென்று விடுவதால் வீட்டில் மகள்களுடன் தனியாக இருப்பார்.

இந்நிலையில், கடந்த சிலதினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இரவு புழுக்கம் அதிகளவில் இருந்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து அப்பெண் இரு பிள்ளைகளுடன் தூங்கியுள்ளார்.

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த போதை ஆசாமி ஒருவர், வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணை தட்டி எழுப்பி, கத்தி முனையில் மிரட்டி உள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அருகிலேயே இரண்டு பெண் பிள்ளைகள் படுத்திருந்ததால் அந்த நபர் மகள்களை ஏதாவது செய்து விடுவாரோ என பயந்துள்ளார்.

இதனால், சத்தம் போட முயன்றபோது அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிஓட முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டுஉள்ளனர்.

தப்பி ஓட முயன்ற அந்த நபரை விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர், அவரை கோயம்போடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x