Published : 09 May 2024 05:11 PM
Last Updated : 09 May 2024 05:11 PM

‘இந்தியாவில் 1950 - 2015 காலத்தில் இந்து மக்கள்தொகை 7.8% சரிவு; முஸ்லிம்கள் 43.15% உயர்வு’

பிரதிநித்துவப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 1950-க்கும், 2015-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்து மக்கள்தொகையில் 7.8% சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள்தொகையில் 43.15% உயர்ந்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மதச் சிறுபான்மையினரின் பங்கு - ஒரு குறுக்குவெட்டு பகுப்பாய்வு (1950-2015) என்ற தலைப்பில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஷாமிகா ரவி தலைமையிலான இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் 1950 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 7.82% குறைந்துள்ளது. அதேசமயம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 43.15% அதிகரித்துள்ளது. இந்திய மக்கள்தொகையில், 1950-ல் 84.68 ஆக இருந்து இந்துக்களின் சதவீதம், 2015-ல் 78.06 ஆக குறைந்துள்ளது. 1950-ல் 9.84 ஆக இருந்த இஸ்லாமியர்களின் சதவீதம், 2015-ல் 14.09 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், 1950-ல் 2.24 ஆக இருந்த கிறிஸ்தவர்களின் சதவீதம், 2015-ல் 2.36 ஆக உயர்ந்துள்ளது. இது 5.38% உயர்வாகும். 1950-ல் 1.24% இருந்த சீக்கியர்கள், 2015-ல் 1.85% ஆக உயர்ந்திருக்கிறார்கள். இது 6.58% உயர்வு. அதேநேரத்தில் சமணர்கள் மற்றும் பார்சிக்களின் சதவீதம் குறைந்துள்ளது. 1950-ல் 0.45% ஆக இருந்த சமணர்களின் எண்ணிக்கை, 2015-ல் 0.36% ஆக குறைந்துள்ளது. 1950-ல் 0.03% ஆக இருந்த பார்சிக்கள், 2015-ல் 0.004% ஆக இருக்கிறார்கள். இது 85% சரிவு.

சர்வதேச அளவில், பெரும்பான்மை மக்களின் விகிதம் குறைந்து வரும் போக்கு நிலவுவதாகவும், அதை ஒட்டி இந்தியாவிலும் பெரும்பான்மை மக்களின் விகிதம் 7.82% குறைந்துள்ளது. இது சமூகத்தில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழல் உள்ளதைக் காட்டுகிறது. அதேநேரத்தில், சாதகமற்ற பிரிவினருக்கு ஏற்ற சூழலையும், ஆதரவையும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை வழங்காத வரை அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாது.

அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான கொள்கை நடவடிக்கைகள், அரசியல் முடிவுகள், சமூக செயல்பாடு ஆகிய அனைத்தும் சமூகத்தில் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கு ஏற்ப இருக்கிறது என்பதையே, பெரும்பான்மை மக்கள்தொகை குறைவு மற்றும் சிறுபான்மை மக்கள் தொகை அதிகரிப்பு காட்டுகிறது. அண்டை நாடுகளைச் சேர்ந்த மக்கள் நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு வருவதில் ஆச்சரியமில்லை.

பெரும்பான்மை மக்கள் தொகை குறைவதும், சிறுபான்மை மக்கள் தொகை உயர்வதும் உலகலாவிய போக்காக உள்ள போதிலும், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அது பிரதிபலிக்கவில்லை. இந்த நாடுகளில், பெரும்பான்மை மதப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து, சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் சுருங்கியுள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத இந்தியா, மியான்மர், நேபாள் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மதத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x