Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து - மின்துறை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்த போராட்டம் :

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுவை உள்ளிட்ட 8 யூனியன்பிரதேசங்களில் இயங்கும் மின் துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கைவிடக் கோரி புதுவை மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கார்ப்பரேஷன், தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவை ஏற்படுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வரு கிறது.

மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு முந்தைய புதுவை அரசு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. அத்தீர்மானத்தை புறந்தள்ளிவிட்டு மத்திய அரசு தன்னிச்சையாக மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்தது. இதனை கண்டித்து கடந்த ஏப்ரல் 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தற்போது புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட புதுவை அரசின் மின்துறை அமைச்சர், மின்துறை தனியார் மயம் குறித்து பதில் அளிக்கும்போது, “ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடு தழுவிய அளவில் மின்சார பகிர்மான கழகம் மற்றும் மின்சார துறைகளில் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பொறியாளர்கள், தொழிலாளர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை (ஆக. 10) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் புதுவை மின்துறை போராட்டக் குழுவும் நாளை ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இப்போராட்டத்துக்கு புதுவை அரசு ஊழியர் சம்மேளனம் ஆதரவு அளிப்பதோடு, இப்பிரச்சினையில் முதல்வர், மின்துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு உடனடியாக மின்துறை போராட்டக்குழுவோடு கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்த சட்ட மசோதா 2021-ஐ நிறைவேற்றுவதை கைவிட வேண்டும். மின்துறையை கார்ப் பரேஷன் அல்லது தனியார் மயமாகவோ மாற்றக்கூடாது. மின்துறை அரசு துறையாகவே நீடிக்க வேண்டும் என்று அறி விக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்சார திருத்த சட்ட மசோதா 2021-ஐ நிறைவேற்றுவதை கைவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x