Published : 17 May 2024 04:10 PM
Last Updated : 17 May 2024 04:10 PM

“ஓய்வு முடிவு சுனில் ஷேத்ரிக்கு அமைதியை கொடுக்கட்டும்” - விராட் கோலி வாழ்த்து

புதுடெல்லி: "சுனில் ஷேத்ரி அருமையான வீரர். ஓய்வு முடிவு குறித்து எனக்கு முன்பே மெசேஜ் செய்திருந்தார். இம்முடிவுக்கு அவருக்கு அமைதியை கொடுக்கும் என நம்புகிறேன்." என்று அவருடைய சிறந்த நண்பரான விராட் கோலி கூறியுள்ளார்.

சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி. பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வரும் ஜூன் 6-ம் தேதி குவைத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதாக நேற்று சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின் வாயிலாக அறிவித்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது நெருங்கிய நண்பரான சுனில் ஷேத்ரிக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில், “சுனில் ஷேத்ரி அருமையான வீரர். ஓய்வு முடிவு குறித்து எனக்கு முன்பே மெசேஜ் செய்திருந்தார். இம்முடிவு அவருக்கு அமைதியை கொடுக்கும் என நம்புகிறேன். கடந்த சில வருடங்களாகவே அவருடன் மிக நெருங்கிப் பழகுகிறேன். அவர் அன்பான மனிதர். அவருக்கு அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சுனில் ஷேத்ரி வரலாறு...: 39 வயதான சுனில் ஷேத்ரி கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். 19 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணியில் வேரூன்றிய அவர், 150 போட்டிகளில் விளையாடி 94 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறார் சுனில் ஷேத்ரி.

அதேவளையில் சர்வதேச கால்பந்து அரங்கில் செயல்பாட்டில் உள்ள வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளார் சுனில் ஷேத்ரி.

நேரு கோப்பை தொடரில் 2007, 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி பட்டம் வெல்ல சுனில் ஷேத்ரி உதவியாக இருந்தார். மேலும் 2011, 2015, 2021-ம் ஆண்டுகளில் தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி பட்டம் வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார்

2008-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாலஞ்ச் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதிலும் சுனில் ஷேத்ரி முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் 27 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசிய கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றிருந்தது.

செகந்திராபாத்தில் பிறந்த சுனில் ஷேத்ரி 2002-ம் ஆண்டு முதன் முறையாக கொல்கத்தாவில் உள்ள மோகன் பகான் அணிக்காக கிளப் மட்டத்தில் அறிமுகம் ஆனார். இதன் பின்னர் 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் சிட்டி விஸார்ட்ஸ் அணிக்காகவும், 2012-ல் போர்ச்சுகலில் உள்ள ஸ்போர்ட்டிங் சிபி அணிக்காவும் விளையாடி இருந்தார்.

7 முறை இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ள சுனில் ஷேத்ரி இந்தியாவில் உள்ள கிளப்களில் ஈஸ்ட் பெங்கால் (2008-2009), டெம்போ (2009-2010) ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதன் பின்னர் ஐஎஸ்எல் தொடரில் மும்பை சிட்டிஎஃப்சி (2015-2016) மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

கிளப் போட்டிகளில் சுனில் ஷேத்ரி பெங்களூரு எஃப்சி அணியில் வெற்றிகரமாக வலம் வந்தார். இந்த அணியில் அவர், 2014 மற்றும் 2016-ம் ஆண்டில் ஐ லீக் தொடரில் பட்டம் வென்று கொடுத்தார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஐஎஸ்எல் தொடரில் வாகை சூடினார். முன்னதாக 2018-ல் சூப்பர் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். 2016-ம் ஆண்டு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பையின் இறுதிப் போட்டியில் பெங்களூரு எஃப்சி அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x