Published : 28 Dec 2023 06:30 AM
Last Updated : 28 Dec 2023 06:30 AM

கிராம மக்களில் 20% பேருக்கு மத்திய அரசின் திட்டங்கள் தெரியவில்லை: அண்ணாமலை கருத்து

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நேற்று யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

கும்பகோணம்/ நாகப்பட்டினம்: ‘விக்சித் பாரத் சங்கல்ப்' யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவது, ‘மோடி கி கியாரண்டி' வாகனத்தின் மூலம் கும்பகோணம் வட்டம் வளையப்பேட்டையில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதை கிராம மக்களுடன் சேர்ந்து பார்த்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் அவர்களிடம் கூறியது: பிரதமர் மோடியின் திட்டங்களால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாறத் தொடங்கியுள்ளது. கிராம மக்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரியாமல் உள்ளனர். இதற்காக தான் அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று, ஒவ்வொரு திட்டத்தையும் எடுத்துக் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, நாகை, கீழ்வேளூர் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மாலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 9 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 67 சதவீதமாக இருந்த சமையல் காஸ் இணைப்பு 99.99 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலி சட்டப்பேரவையில் ஏழைகளுக்காக பேசாமல், இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து பேசாமல், ராமர் பாலத்தை இடித்து கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என பேசி இருக்கிறார்.

இதனால் அவர் கப்பல் கம்பெனி நடத்துகிற டி.ஆர்.பாலுவின் மேலாளராக செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது. மோடியின் ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் சரித்திரத்தை மாற்றி அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நாகை வந்த பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில், சிக்கல் கடைத் தெருவில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அமிர்தராஜா உட்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x