Published : 28 Dec 2023 05:23 AM
Last Updated : 28 Dec 2023 05:23 AM

ஆதிதிராவிடர், பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தனி கவனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பல்வேறு நலத்திட்ட உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

சென்னை: ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், ரூ.32.95 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்கள், விடுதிகள், சமுதாயநலக் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ரூ.138 கோடிமதிப்பீட்டில் கட்டப்பட உள்ள விடுதிகள், கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், ரூ.194 கோடி மதிப்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டம், தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதியம், பழங்குடியின ருக்கான வாழ்வாதார திட்டம், ஆதிதிராவிடர், பழங்குடியினரின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான முதல்வரின் தொழில் முனைவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் கடனுதவிகள், பழங்குடியினர், தூய்மை பணியாளர்களுக்கு வீடு வழங்குதல், உயர்கல்வி பெற கல்வி உதவித் தொகை, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

சமூக நீதி, சமத்துவம், சமதர்மம்,சகோதரத்துவம் ஆகிய மானுட நெறிகளின்படி தமிழகத்தை உருவாக்க என்னை ஒப்படைத்து உழைத்து வருகிறேன். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதை நிர்வாக நெறியாக கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம். அந்த அடிப்படையில், ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில், அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதியை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம். ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு தொண்டு செய்பவர்களுக்கு அம்பேத்கர் விருதுடன், ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில கட்டண சலுகை வழங்கப்படுகிறது. முனைவர் படிப்புக்கான உதவித் தொகை தலா ரூ.1 லட்சம் வீதம் 2,974 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று உயர்கல்வி பயில, மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மனிதநேய வார விழா: மக்களிடம் தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜனவரி 24 முதல் 30-ம்தேதி வரை ‘மனிதநேய வார விழா’ நடத்தி வருகிறோம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை உருவாக்கி உள்ளோம். தாட்கோ சார்பில் கடந்தநிதி ஆண்டில் 10,466 பேருக்கு ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடி நிதியுடன்பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதியம் தொடங்கப்பட்டு, திட்டத்தின் சிறப்பான வெற்றியால் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ தொடங்கப்பட்டு, நடப்பு நிதி ஆண்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தில் பங்கு: காடுகளில் வாழும் பழங்குடியினரின் வன உரிமையை பாதுகாக்க, 11,601 தனிநபர் வன உரிமைகளும், 691 சமூக வன உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. தூய்மை பணியாளர்நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, 87,327 பேருக்கு ரூ.10 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, அந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை, சுயமரியாதை, அதிகாரத்தில் பங்கு போன்ற நிலைகளில் ஆதிதிராவிட, பட்டியலின மக்களை உயர்த்தும் பணிகளை அரசு செய்துகொண்டு வருகிறது.

நிதி ஒதுக்கீடு, தொலைநோக்கு பார்வை, கண்காணிப்பால் மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிவிடலாம். ஆனால், மக்கள் மனதில் சமூக வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி உருவாகி, மனதளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. அதே நேரம், சமூக வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியை உருவாக்கும் நமது விழிப்புணர்வு பயணம் தொய்வின்றி தொடர வேண்டும். அப்பணிகளையும் அரசு செய்து வருகிறது.

அம்பேத்கரின் கனவான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகள் நிறைந்த, சமூக நீதியின் அடிப்படையிலான ஒரு சமத்துவ சமுதாயமாக தமிழகத்தை உருமாற்றும் வகையில் நமது விழிப்புணர்வு பயணத்தை தொய்வின்றி தொடர்வோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, சி.வி.கணேசன், கயல்விழி செல்வராஜ், தாட்கோ தலைவர்மதிவாணன், சென்னை மேயர் பிரியா,தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா, தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x