

சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா (66), சமீபத்தில் சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்திலும் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவருக்கு திடீரென மூச்சு திணறலுடன், நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு இதய ரத்தநாள அடைப்பு இருந்தது தெரிய வந்தது. அதைதொடர்ந்து, அடைப்பை சரி செய்து, ‘ஸ்டெண்ட்’ பொருத்தியதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஹெச்.ராஜாவை, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது கணவர் சவுந்தரராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.