Published : 24 Nov 2017 09:46 AM
Last Updated : 24 Nov 2017 09:46 AM

இரட்டை இலையை யாருக்கு ஒதுக்கினால் என்ன?- அதிமுகவின் முதல் வேட்பாளர் மாயத்தேவர் விரக்தி

இரட்டை இலையை யாரிட்டையும் கொடுத்துட்டு போறாங்க, எல்லாம் முடிந்துபோனது என அதிமுகவின் முதல் வேட்பாளரான கே.மாயத்தேவர் விரக்தியுடன் தெரிவித்தார்.

எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய சிறிது காலத்திலேயே திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

அதிமுக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.மாயத்தேவரை வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார். இரட்டை இலையில் போட்டியிட்ட முதல் வேட்பாளர் அவர்தான். அவரை ஆதரித்து எம்ஜிஆர் திண்டுக்கல் தொகுதியில் வீதி, வீதியாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. கடைசியில் மாயத்தேவர் வென்றார்.

தற்போது மாயத்தேவருக்கு 85 வயது. உடல் நலமில்லாததால் வீட்டிலே ஓய்வெடுக்கிறார்.

இரட்டை இலை சுவாரசியம்

திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்டபோது, இரட்டை இலை சின்னம் சுயேச்சைகளுக்கான பட்டியலில் இருந்தது. சின்னம் ஒதுக்குவதற் கான வேட்பாளர்கள் கூட்டத்தின் போது மாயத்தேவர், இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தார்.

இதுகுறித்து எம்ஜிஆரிடம் கூறும்போது, இரட்டை இலை வெற்றியின் அடையாளத்தை குறிப்பதுபோல் இருக்கிறது. இந்த சின்னத்தை சுவரில் வரைவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் எளிதாக இருக்கும் என்பதால் இரட்டை இலையைத் தேர்ந்தெடுத்தேன் என்றார். அவரை எம்ஜிஆர் பாராட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைந்தபோது, இரட்டை இலை முடங்கப்பட்டது வேதனை அளிக்கிறது, கட்சியைக் காப்பாற்ற சசிகலாவை தவிர வேறு வழியில்லை என கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது சின்னம் முதல்வர்-ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘யாரிட்டையும் கொடுத்துட்டுப்போறாங்க, இனிமேல் யாருக்கு ஒதுக்குனா என்ன...விடுங்க நமக்கென்ன, எல்லாம் முடிந்துபோனது’ என்றார் விரக்தியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x