Published : 24 Nov 2022 07:11 PM
Last Updated : 24 Nov 2022 07:11 PM

மறக்குமா நெஞ்சம் | இதே நாளில் 1993 ஹீரோ கோப்பை அரையிறுதியில் கடைசி ஓவர் வீசி சச்சின் மேஜிக்

கோப்புப்படம்

கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் மறக்க முடியாத வெற்றிகள் பல ரசிகர்களின் நெஞ்சில் என்றென்றும் நிறைந்திருக்கும். அப்படி இந்திய அணியின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்றாக உள்ளது 1993-ல் நடைபெற்ற ஹீரோ கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி. அந்தப் போட்டியில் கடைசி ஓவரை சச்சின் வீசி மாயம் செய்திருப்பார். இதே நாளில்தான் அந்த வெற்றியை இந்தியா ருசித்திருந்தது. அதை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.

கடந்த 1993-ல் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் பின்வாங்கியது.

லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பிடித்தன. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் முதல் அரையிறுதி போட்டியில் விளையாடின. இந்தப் போட்டி இதே நாளில் (நவம்பர் 24) நடைபெற்றது.

ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியின் கேப்டன் அசாருதீன், சச்சினை பந்து வீச சொல்லி பணித்தார். அந்த போட்டியில் அதுவரை ஒரு ஓவர் கூட சச்சின் வீசவில்லை.

ஆனாலும் மிகத் துல்லியமாக பந்து வீசி வெறும் 3 ரன்களை மட்டுமே அந்த ஓவரில் விட்டுக் கொடுத்தார். அதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதும் இந்திய அணிதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x