Published : 21 Dec 2022 04:24 PM
Last Updated : 21 Dec 2022 04:24 PM

கரோனா குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: சீரம் தடுப்பூசி நிறுவன சிஇஓ

ஆதர் பூனாவாலா | கோப்புப் படம்

புதுடெல்லி: கரோனா தொற்று குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தலைமையில் ஆலோசனை: சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராஜிவ் பல், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், தொற்றுநோய்களுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.எல். அரோரா, உயிரிதொழில்நுட்ப துறை செயலாளர் ராஜேஷ் கோகலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மன்சுக் மாண்டவியா ட்வீட்: ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "கரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்துள்ளதை அடுத்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அதேநேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் பிறப்பித்துள்ளேன். எத்தகைய ஒரு சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

டாக்பர் வி.கே. பால் கருத்து: கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், "முன்னெச்சரிக்கைக்கான 3-வது கரோனா தடுப்பூசியை 27-28 சதவீத மக்களே போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது கட்டாயம். அதேபோல், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.

அதார் பூனவல்லா ட்வீட்: இந்நிலையில், கரோனா தொற்று குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநரான அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எனினும் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், நாம் சிறப்பான முறையில் தடுப்பூசி பாதுகாப்பை பெற்றிருக்கிறோம். அதேநேரத்தில், மத்திய அரசும் சுகாதாரத் துறையும் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x