Published : 08 Feb 2018 09:34 PM
Last Updated : 08 Feb 2018 09:34 PM
பட்ஜெட் விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தவிர பாஜக அரசு எதையும் செய்யவில்லை என்று அதிமுகவின் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யான ராமச்சந்திரன் பேசியதாவது: இந்த பட்ஜெட் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இதை கூறுவதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இதற்காக ஒரு அளவுகோலை வைத்து அளந்தாலும் அது அனைத்து வகையிலும் பலதரப்பட்ட சமூகத்தினருக்கும் பயன்பெறாத நிலையில் உள்ளது. நான்கு வருடங்களுக்கு முன் இந்த அரசிற்கு வாக்களித்தவர்கள் அதன் மீது பலத்த நம்பிக்கை வைத்திருந்தனர். இந்த நம்பிக்கை அனைத்தும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வீணாகிவிட்டது தெளிவாகிறது. வீட்டு பலன், கல்வி, வேலைவாய்ப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத ஊதியம் பெறுவோருக்கு எந்த பலனும் பட்ஜெட்டில் இல்லை. தொழில்துறை மற்றும் மாநிலங்களுக்கும் எந்த பலனும் பட்ஜெட்டில் அளிக்கப்படவில்லை.
மத்திய அரசிற்கு சாதகமாக இருந்து அதற்கு ஜிஎஸ்டி போல் வருவாய்களை பெருக்கும் பணியை மத்திய நிதி அமைச்சர் செய்துள்ளார். வறுமையை நீக்கி உள்கட்டமைப்பை அதிகரிப்பதாகக் கூறியவர் அதற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. விவசாயிகளின் விளைச்சல் மற்றும் உடல்நலம் பற்றி பேசப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனை சிந்திக்க அரசிற்கு 4 ஆண்டுகள் ஆகி விட்டன. இதிலும் அவர்கள் உள்ள நிலையில் எந்தவகையான உடனடிப் பலன் கிடைக்கும் என்ற குறிப்புகள் இல்லை. கடன் தள்ளூபடி மீதும் அறிவிப்புகள் இல்லை.
நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துறையில் அரசு அக்கறை கொண்டுள்ளதா என அறிய விரும்புகிறேன். உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளது எனில் அவர்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். பம்புசெட்களுக்கு மின்சாரம் அளிக்கப்பட வேண்டும். தரமான விதைகள் குறைந்த விலையில் விநியோகிக்க வேண்டும். அதன் விளைச்சல் பொருட்களுக்கு உகந்த விலை கிடைக்கச் செய்ய வேண்டும். முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தவிர அரசு இவை எதையும் செய்யவில்லை என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையிலேயே விவசாயிகள் நலனில் தீவிர அக்கறை கொண்டிருந்தால், நதிகள் இணைப்பிற்கு தேவையான நிதியை ஒதுக்கி இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை டெல்டா விவசாயிகளுக்கு காவிரியில் இருந்து மட்டும் நீர் கிடைக்கும். ஆனால், இந்த நீர் கிடைக்காமல் அவர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெண்களுக்கு என எந்த சிறப்பு சலுகைகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டங்களுக்கும் எதுவும் இல்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு சிறிது பலன் பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளதை ஏற்கிறேன். ஆனால், நாட்டில் தொழில் முன்னேற்றத்திற்கு இது போதாது. எனது இந்த வார்த்தைகளுடனும், கனத்த மனதுடனும் நான் பட்ஜெட்டை ஆதரிக்கிறேன்.''
இவ்வாறு கே.என்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT