Last Updated : 31 Dec, 2023 03:19 PM

 

Published : 31 Dec 2023 03:19 PM
Last Updated : 31 Dec 2023 03:19 PM

‘புகழும் கவுரவமும் வரும்’- மகரம் ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மகரம் பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள், அன்பின் அடையாளமாக இருப்பவர்கள்.

ராசிக்கு லாப வீட்டில் சுக்ரனும், புதனும் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பிகளிடமிருந்து கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிட்டும். வழக்கு சாதகமாகும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். புத்தாண்டு பிறக்கும் போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்த வேண்டாம். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சித்தர்களை சந்தித்து அருள் ஆசி பெறுவீர்கள். நெருக்கமானவர்கள் சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக் கூடும். மன அமைதி பெற ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

குரு பகவான் 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு, மரியாதை கூடும். அவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும். மகன் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். விலகிச் சென்ற சொந்த - பந்தங்கள் மனம்மாறி வலிய பேசுவார்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடிபுகுவீர்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

இந்த வருடம் முடிய உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்வதால் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். 9-ம் வீட்டில் கேது அமர்வதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அடிமனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். தூக்கம் வரும். கொடுக்கல் - வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். தந்தையாரின் உடல் நலம் பாதிக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் அனைவரும் உங்கள் உதவியை நாடி வருவார்கள். நீண்டகால கனவான வீடு, மனை வாங்கும் திட்டம் நிறைவேறும். தெலுங்கு, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சாதுக்கள் உதவுவார்கள்.

நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். யாரையும் நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே களத்தில் இறங்கி வேலை செய்வது நல்லது. இல்லத்துக்கு தேவையான நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வருட ஆரம்பம் முதல் வருடம் முடியும் வரை பாதச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநிலப் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் நிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.

வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். ஏப்ரல், மே மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். புதுத் தொடர்பு கிடைக்கும். வேலையாட்களால் மறைமுகப் பிரச்சினைகள் வந்து நீங்கும். ஜூன் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, மருந்து, இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அரசால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவறவிடாதீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகமாகும். மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் புது வாய்ப்புகள் வரும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பளம், சலுகை கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

இந்த வருடம் வேலைச்சுமையையும், திடீர் பயணங்களையும் தந்தாலும், பணவரவையும், புகழ், கவுரவத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை சென்று வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x