Last Updated : 06 May, 2024 07:05 AM

2  

Published : 06 May 2024 07:05 AM
Last Updated : 06 May 2024 07:05 AM

ரேபரேலியில் ராகுல் வெற்றிக்கு வாய்ப்புள்ளதா?

ராகுல் காந்தி

உ.பி.யில் காங்கிரஸுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளாக அமேதியும், ரேபரேலியும் உள்ளன. இவற்றில் 5 வருடங்களுக்கு முன் கைவிட்டுப் போன அமேதி பற்றி ராகுல் கவலைப்படவில்லை. இதற்கு அங்கு பாஜக வலுவடைந்திருப்பது காரணம் ஆகும். இதனால், தனது தாயின் தொகுதியான ரேபரேலியை ராகுல் தேர்வு செய்துள்ளார்.

பாஜக சார்பில் ரேபரேலியில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இவர் அமேதி பாணியில் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்கிறார்.

2014-ல் அமேதியில் ராகுலை எதிர்த்துப் போட்டியிட ஸ்மிருதி இரானி தோல்வியுற்றார். என்றாலும் ஸ்மிருதி தொகுதியை காலி செய்து விடாமல் அங்கேயே தங்கிவிட்டார். தொடர்ந்து அவர் மக்களிடையே வாழ்ந்து, செய்த உழைப்பு 2019-ல் அவரது வெற்றிக்கு காரணமாயிற்று.

இதேபோன்று தினேஷும் 2019-ல் சோனியா காந்தியிடம் தோல்விஅடைந்தார். என்றாலும் சோனியாவின் வாக்குகளை குறைத்திருந்தார். இதற்காக பாஜக தினேஷுக்கு உ.பி. மாநில மேலவையில் எம்எல்சிபதவி அளித்ததுடன் மாநில அமைச்சராகவும் நியமித்தது. இந்த செல்வாக்கில் தினேஷ், தொடர்ந்து ஸ்மிருதியை போல் ரேபரேலி மக்களுடன் தங்கிப் பணி செய்துவந்தார். மேலும், 2018 வரை காங்கிரஸில் சோனியாவுக்கு நெருக்கமானத் தலைவராக தினேஷ் இருந்ததன் பலனும் அவருக்கு தேர்தலில் கிடைக்கலாம்.

அதேநேரத்தில் ரேபரேலியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னாள் முதல்வர் மாயாவதி தனது பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். ரேபரேலி வாக்காளர்களில் சுமார் 34 சதவீதம் பேர் தலித்துகள். தலித் ஆதரவு கட்சியான பிஎஸ்பி, தாகூர் பிரசாத் யாதவ் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் ராகுலிடம் இருந்து யாதவர் மற்றும் தலித் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் சமாஜ்வாதியுடன் பிஎஸ்பி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கடந்தமுறை இக்கூட்டணி ரேபரேலியில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், தலித் வாக்காளர்களில் பெரும்பாலானோர் சோனியாவுக்கு வாக்களித்தனர். தற்போது ரேபரேலியில் உள்ள 6 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே காங்கிரஸுக்கு வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது.

அதேவேளையில் 2022 சட்டப்பேரவை தேர்தலில் ரேபரேலியின் 5 தொகுதிகளில் 4-ல் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. ஒன்றை மட்டுமே பாஜக கைப்பற்றியது. இங்கு காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சமாஜ்வாதி எம்எல்ஏ மனோஜ் பாண்டேவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸுக்கு ரேபரேலியில் கிடைத்த வாக்கு சதவீதங்களும் குறைந்து வருகின்றன. 2009-ல் 72.2%, 2014-ல் 63.8% வாக்குகள் கிடைத்தன. 2019-ல் பாஜகவின் தினேஷ் சோனியாவுக்கு சவாலாக விளங்கினார். இவரால் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 55.8 என்றானது. பாஜகவுக்கு 2014-ல்21.1% வாக்குகள் கிடைத்தது. இது 2019-ல் 38.7% ஆக உயர்ந்துள்ளது.

இத்தனை காரணிகளுக்குப் பிறகும் ராகுலை பாஜக வீழ்த்துவது கடினம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில் ரேபரேலியின் முதல் மக்களவைத் தேர்தலில் பெரோஸ் காந்தி போட்டியிட்டது முதல் நேரு-காந்தி குடும்பத்துடன் அதன் வாக்காளர்கள் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளனர்.

இன்று பிரதமர் மோடிக்கு நிகராக ராகுல் பார்க்கப்படுகிறார். இதற்கான பலனுடன் நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் ராகுலுக்கு கூடுதல் பலம் தரக் கூடியதாக உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரச்சாரம் செய்ய ராகுலுக்கு குறைந்த கால அவகாசமே உள்ளது. இதுவும் அவருக்கு சவாலாகவே பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x