Last Updated : 19 Dec, 2023 07:26 AM

 

Published : 19 Dec 2023 07:26 AM
Last Updated : 19 Dec 2023 07:26 AM

ஆண்டாள் திருப்பாவை 3 | பரந்தாமன் திருவடிகளை சரணடைவோம்!

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

மகாபலி என்ற மன்னன் அளவற்ற ஆற்றல் கொண்டவனாக விளங்கினான், அனைத்து உலகங்களையும் கட்டி ஆட்சி புரிந்த அவனிடம் 'தான்' என்ற அகந்தை இருந்தது. அனைவரைக் காட்டிலும் தானே மிகவும் உயர்ந்தவன் என்ற எண்ணம் மேலோங்கியது.நல்லவர்களை துன்புறுத்திய வண்ணம் இருந்தான், அப்போதுஅவனுக்குபாடம்புகட்டஎண்ணியதிருமால் மிகவும் சிறிய வடிவம் (வாமன அவதாரம்) எடுத்தார். மகாபலி தவறு செய்ததற்காக அவனை திருமால் அழிக்கவில்லை. மாறாக தன் திருவடியை அவன் தலைமீது வைத்து அவனை ஆட்கொண்டார்.

தனது ஓரடியால் உலகத்தை அளந்த பரந்தாமனின் பெயரைச் சொல்லி பாடினால், மகாபலியின் தவறுகளை பொறுத்து அருள் தந்ததுபோல நமக்கும் அருள் புரிவான். அவன் திருவடிகளில் சரண் புகுந்தால் அவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான். இதுவே சரணாகதி தத்துவம்.

இறைவனின் புகழ் பாடி பாவை நோன்புக்காக நாம் அதிகாலை நீராடினால், நாடு முழுவதும் எவ்வித தீங்கும் இன்றி, மாதம் மும்மாரி மழை பெய்யும். அதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து, செந்நெல் வயல்களில், கயன்மீன்கள் துள்ளி விளையாடும். நீர்நிலைகள் பூத்துக் குலுங்கும். குவளை மலர்களில் வண்டுகள் வந்தமர்ந்து தேன் பருகும். பசுக்கள் பாலால் குடங்களை நிறைத்து விடும். அழிவற்ற செல்வம் எங்கும் நிறையும். அதனால் உடனே மார்கழி நீராட கிளம்ப வேண்டும் என்று தன் தோழியரை அழைக்கிறாள் கோதை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x