Last Updated : 30 Dec, 2023 05:49 PM

 

Published : 30 Dec 2023 05:49 PM
Last Updated : 30 Dec 2023 05:49 PM

‘எதிர்பாராத திருப்பம்’ - ரிஷபம் ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம் பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். சுற்றியிருப்பவர்களின் சுகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் நீங்கள், பல நேரங்களில் தாமரை இலைத் தண்ணீர் போல் இருப்பீர்கள்.

உங்கள் ராசியை சுக்ரனும், புதனும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். வாகனம் வாங்குவீர்கள். பாதியிலேயே நின்ற வீடு கட்டும் பணி இனி தொடங்கும்.
உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணம் வரத் தொடங்கும். வழக்கு சாதகமாகும்.

வருடம் பிறக்கும் போது ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சின்ன சின்ன விபத்துகள் வரும். முன்கோபம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொத்துப் பிரச்சினை ஏற்படலாம். 30.4.2024 வரை குரு 12-ம் வீட்டில் இருப்பதால் சின்ன சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

1.5.2024 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமரப் போகிறார். எனவே உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதெல்லாம் இனி கூடாது. இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கோபத்தை பிள்ளைகளிடம் காட்ட வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் எந்த முடிவும் எடுப்பது நல்லது. விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் நிற்பதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். சகோதர சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஸ்பெக்குலேஷன் வகைகள் மூலம் பணம் வரும்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்த ஆண்டு முழுக்க தொடர்வதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். அவர்களின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். தாய்மாமன் வகையில் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடனை குடும்பத்துடன் சென்று முடிப்பீர்கள்.

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். பொது விழாக்கள், கல்யாண, கிரஹப்பிரவேச சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.

வியாபாரிகளே! இந்த வருடத்தின் முற்பகுதி அமோகமாக இருக்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பற்று வரவும் உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்தியோகஸ்தர்களே! இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து உங்கள் கை ஓங்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். சிலருக்கு புது வேலை அமையும். உயரதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள்.

இந்த ஆண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் அமைத்துத் தருவதாக இருக்கும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், ஓதிமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் குமார சுப்ரமணியரை சென்று வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயாளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x