Published : 21 Dec 2023 08:05 AM
Last Updated : 21 Dec 2023 08:05 AM

ஆண்டாள் திருப்பாவை 5 | நீல வண்ணன் புகழ் பாடுவோம்..!

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை,
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பாற்கடலில் பள்ளி கொண்ட நீலவண்ணன், நிலைத்த தன்மை உடைய மதுராவில் தோன்றிய மாயக்காரன். கோகுலத்தில் ஆயர் குலத்தில் வளர்ந்ததால் அவன் அக்குலத்தின் குலவிளக்காக போற்றப்படுகிறான். மாய வித்தைகள் செய்வதால் அவனை விளையாட்டு பையனாக நினைத்துக் கொள்ள வேண்டாம். பேராற்றல் உடையவனாக இருந்தாலும், தனது தாய் யசோதை, அவனை உரலில் கயிற்றால் கட்டியபோது, தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மிகவும் எளிமையாக, குழந்தை தாமோதரனாக காட்சி அருளினான்.

தூய்மையும், பெருமையும் உடைய யமுனை நதிக்கரையில் பல திருவிளையாடல்களைப் புரிந்தவன். ஈன்ற பொழுதில் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயை உலகத்தில் உள்ள அனைவரும் புகழும்படி செய்தான். அப்படிப்பட்ட அருள் வடிவானவனின் அருளைப் பெறுவதற்கு. உடனே எழுந்து வாருங்கள். அவனை தூய மனதுடன் வணங்கி, நறுமணம் வீசும் மலர்களால் அர்ச்சிப்போம். எந்நேரமும் அவனை நினைப்போம். அவனது புகழை வாயாரப் போற்றி மகிழ்வோம்.

அதிகாலை வேளையில் நீராடி கண்ணனை தியானித்தால், நாம் முன்பு செய்த பாவங்கள், இனிமேல் வரக் காத்திருக்கும் பாவங்கள் அனைத்தும் தீயினில் இட்ட தூசு போல் பொசுங்கி விடும். அவனைப் போற்றி, அவனிடம் நீயே கதி என்று சரணாகதி அடைய வேண்டும். தீயவற்றைப் பேசாமல், அவனது திருநாமத்தை மட்டுமே சொல்லி அவனை வழிபடுவோம் என்று தன் தோழிகளை அழைக்கிறாள் பெரியாழ்வார் மகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x