Published : 18 Mar 2020 07:47 PM
Last Updated : 18 Mar 2020 07:47 PM

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,135 ஆக அதிகரிப்பு

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைப்பு கூறும்போது, “ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் காய்ச்சலுக்கு 147 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து கோவிட் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 17,361 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தற்போதைய தகவலின் படி சுமார் 2 லட்சம் பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8,000 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x