Published : 06 May 2024 04:36 PM
Last Updated : 06 May 2024 04:36 PM

“கவலைப்படாதே... நான் இருக்கிறேன் என்பார் கம்மின்ஸ்!” - நடராஜன் பகிரும் சுவாரஸ்யங்கள்

நடராஜன் மற்றும் கம்மின்ஸ்

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன். இந்நிலையில், நடப்பு சீசனின் சுவாரஸ்ய விஷயங்கள் மற்றும் டி20 உலகக் கோப்பை அணியில் தனக்கான வாய்ப்பு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

“இந்த சீசனில் பவுலர்கள் பாவம் இல்லையா? அணி 200+ ரன்கள் எடுத்தால் அது சேஃப் என நம்பி விளையாட முடியாது. அந்த அளவுக்கு ஆடுகளம் உள்ளது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இடையிலான ஆட்டத்தை பாருங்கள். 260+ ரன்கள் சேஸ் செய்யப்படுகிறது. அந்த ஆட்டமே வீடியோ கேம் போல இருந்தது. இந்த மாதிரியான ஆடுகளங்களில் சிறப்பாக ஒரு பவுலர் செயல்பட்டால், அவர் எங்கு சென்றாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை கிடைக்கும்.

இந்த சீசனில் சென்னை மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் பனிப்பொழிவின் தாக்கம் உள்ளது என நினைக்கிறேன். பயிற்சியின் போது ஈரமான பந்தை பயன்படுத்துவேன். இதற்கு முந்தைய சீசன்களிலும் பனிப்பொழிவில் பந்து வீசிய அனுபவம் உள்ளது. என்னதான் பயிற்சி இருந்தாலும் ஆட்டத்தின் போது நாம் கிரிப்பை இழந்தால், யார்க்கர் மிஸ் ஆகும். அதை பேட்ஸ்மேன் சிக்ஸர் ஆக்குவார். நான் பனிப்பொழிவு இருந்தாலும், இல்லாமல் போனாலும் யார்க்கரை எப்படி துல்லியமாக வீசுவது என்பதில் மட்டும் கவனம் வைப்பேன். இதில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை.

கடந்த டிஎன்பிஎல் சீசனுக்கு பிறகு ஸ்லோ கட்டர்கள் வீசுவதில் கவனம் செலுத்தினேன். டெத் ஓவர்களில் அது பலன் தருகிறது. புவி பாய் (புவனேஷ்வர் குமார்) இந்த விஷயத்தில் பக்க பலமாக உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்துக்கு பிறகும் நான் செய்த தவறுகள் என்ன என்பது குறித்து அவருடண்ன் பேசுவென். பவுலர்கள் இரண்டு பவுன்சர்கள் வீசலாம் என்பது கூடுதல் பலம்தான்.

கேப்டன் கம்மின்ஸ் எனக்கு நிறைய சுதந்திரம் தருகிறார். பந்து வீச்சாளர்களுடன் அவரது உரையாடல் அபாரமாக உள்ளது. நான் எனது பிளான்படி செல்வேன். அதில் குழப்பம் வந்தால் அவரை அணுகுவேன். எனது மைண்ட் செட் குறித்து அவர் நன்கு புரிந்து கொள்கிறார். நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால், அவருடன் எனக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. ‘கவலைப்படாதே, எது நடந்தாலும் நான் உனக்காக இருக்கிறேன்’ என நம்பிக்கை தருவார்.

உலக கிரிக்கெட்டில் பட்டங்களை வென்ற கேப்டன் உடன் விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது. கிளாசனுக்கு நான் பயிற்சியின் போது பந்து வீசி உள்ளேன். பந்தை தூரமாக அடித்து துவம்சம் செய்வார். அந்த வகையில் எந்த பவுலராக இருந்தாலும் அவருக்கு பந்து வீச கொஞ்சம் அச்சம் இருக்கத்தான் செய்யும். நானும் அப்படித்தான். அவரது பலம் என்ன என்று எனக்கு தெரியும். நான் அவருக்கு எதிராக விளையாடினால் அதை பயன்படுத்திக் கொள்வேன்.

டி20 உலகக் கோப்பை அணி தேர்வில் எனது பெயர் பேசப்பட்டதே எனக்கு மகிழ்ச்சிதான். அதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தேர்வாளர்கள் பரிசீலனையில் நான். அணியில் எனது தேர்வு குறித்து காரசார விவாதமும் ஒரு பக்கம் நடந்தது. நான் அணியில் இடம் பெறுவது அல்லது இடம் பெறாதது எனது கையில் இல்லை.

ஒரு கட்டிடத்தின் மீது ஏற ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும். இப்போதைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெற்றி பெற செய்வதில் எனது கவனம் உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாதது என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x