Published : 07 May 2024 05:05 AM
Last Updated : 07 May 2024 05:05 AM

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் 2 நாட்கள் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11, 12 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று (மே 7) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், மதுரை பேரையூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 4 செமீ, கரூர் மாவட்டம் மாயனூர், திண்டுக்கல் மாவட்டம் புகையிலை நிலையம், வேடசந்தூர் ஆகிய இடங்களில் தலா 3 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திண்டுக்கல், கரூர் மாவட்டம் கடவூர், திருச்சி மாவட்டம் பொன்னையார் அணை, தேனி மாவட்டம் தேக்கடி ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 10-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 109 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 104 டிகிரி, கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். இன்று வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x