Published : 18 Mar 2020 04:28 PM
Last Updated : 18 Mar 2020 04:28 PM
இஸ்ரேலில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் புதன்கிழமை கூறும்போது, “இஸ்ரேலில் புதிதாக 90 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் முலம் இஸ்ரேலில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர மருத்துவ கிசிக்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
சமீப நாட்களில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்று இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “நாங்கள் மற்ற நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்காணித்து வருகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே இவ்வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஒரு பிரதமராக நான் ஒன்றை மகிழ்ச்சியாகக் கூற விரும்புகிறேன். நாம் யாரையும் இழக்கவில்லை” என்றார்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தற்போதைய தகவலின் படி சுமார் 1,85,000 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7,500 பேர் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT