Published : 15 Nov 2022 06:10 AM
Last Updated : 15 Nov 2022 06:10 AM

உ.பி.யில் டெங்கு அதிகரிப்பு: பள்ளி சீருடையில் மாற்றம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டை மற்றும் முழு கால் சட்டை அணியுமாறு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இடைநிலைக் கல்வித்துறை அனைத்து மாவட்ட பள்ளி அலுவலர்களுக்கும் மாணவர்களை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக இடைநிலைக் கல்வி இயக்குநர் மகேந்திர தேவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பள்ளிகள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அரைக் கை மற்றும் அரைக் கால் சட்டை சீருடைக்கு பதிலாக மாணவர்களை முழுக்கை சட்டை மற்றும் முழு கால் சட்டையுடன் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும். தினசரி பிரார்த்தனை கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மாணவர்களுக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் ஆகியவை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த குழந்தைக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x