Published : 27 Jun 2023 04:15 AM
Last Updated : 27 Jun 2023 04:15 AM

தொழில்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு உலக வங்கி ரூ.2,000 கோடி கடன் வழங்க முடிவு

புதுடெல்லி: இந்தியாவில் அரசு சாா்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் தொழில்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.2,095 கோடியை (255.5 மில்லியன் டாலா்) கடனாக வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி படிப்புக்கு அடுத்த படியான மூன்றாம்நிலைக் கல்வியில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 2011-12-ஆம் கல்வியாண்டில் 2.9 கோடியாக இருந்த உயா் கல்வி மாணவா் சோ்க்கை, 2019-20-ஆம் ஆண்டில் 3.9 கோடியாக உயா்ந்துள்ளது.

இருந்தபோதும், இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத தகவல் தொடா்பு, பகுத்தறிவு உள்ளிட்ட திறன்களில் இடைவெளிகள் அதிகரித்திருப்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சூழலில், இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயா்த்தவும், மாணவா்களுக்கு அதிகவேலைவாய்ப்புகள் கிடைக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் 255.5 மில்லியன் டாலா், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,095 கோடி கடன் வழங்குவதற்கு வங்கியின் செயல் இயக்குநா்கள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பன்முகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்படுத்தப்படுவதோடு, மாணவா்களின் திறன் மற்றும் வேலைவாய்ப்புக்கான தகுதியை மேம்படுத்துவதற்கான ஆதரவும் அளிக்கப்படும். கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி, தொழில்முனைவு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நிா்வாக மேம்பாட்டுக்கான வாய்ப்பும் ஏற்படும்.

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமாா் 275 அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 3.5 லட்சம் மாணவா்கள் பலனடைவா்.

தகவல்தொடா்பு மற்றும் பருவநிலை மாற்ற தாக்க பாதுகாப்பு உள்ளிட்ட வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்கள் சோ்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தை பெறும் வாய்ப்புமாணவா்களுக்கு கிடைக்கும்.அதுமட்டுமின்றி, சிறந்த தொழில்பயிற்சி, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளையும் மாணவா்கள் பெற முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x