Published : 27 Jun 2023 06:25 AM
Last Updated : 27 Jun 2023 06:25 AM

நகை கடை உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - பட்டுக்கோட்டையில் வியாபாரிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

பட்டுக்கோட்டையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நகை வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன்(58). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் பட்டுக்கோட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், இவர் திருட்டு நகையை வாங்கியதாக கூறி, ஜூன் 22-ம் தேதி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸார், இவரது நகைக்கடையில் சோதனை நடத்தினர். பின்னர், ராஜசேகரன், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோரை விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு, வியாபாரிகள் உள்ளிட்டோரின் முயற்சியால் நேற்று முன்தினம் ராஜசேகரன், அவரது மனைவி ஆகியோர் வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில், வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜசேகரன், செட்டியக்காடு என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவாரூர் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர். ராஜசேகரனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகரன், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை போலீஸார் சித்ரவதை செய்ததாகவும், இதனால் ராஜசேகரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி, போலீஸாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, பட்டுக்கோட்டையில் நேற்று காலை முதல் நகைக் கடைகள், நகைப் பட்டறைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல மதியம் 2 மணி முதல் 4 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

நகைக்கடை உரிமையாளர்கள், பொற்கொல்லர் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்டோர் ராஜசேகரனை தற்கொலைக்கு தூண்டிய போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

வருவாய்த் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி திருச்சி கே.கே.நகர் உதவி ஆய்வாளர் உமாசங்கரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து, 7 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர், ராஜேசகரனின் சடலத்தை அவரது குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x