Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

மத்திய அரசை கண்டித்து 20-ம் தேதி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் : வீடுகள் முன்பு நடத்துமாறு கூட்டணி கட்சியினருக்கு துரைமுருகன், கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் 20-ம் தேதி வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துமாறு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர்கூட்டணி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின்நடவடிக்கைகளை கண்டித்து செப். 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் வரும் 20-ம் தேதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவரவர் இல்லம் முன்பு கருப்புக் கொடியேந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின்உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கட்சி நிர்வாகிகள், கூட்டணிகட்சி நிர்வாகிகள், தோழர்களுடன் இணைந்து வரும் 20-ம் தேதி காலை 10 மணி அளவில் அவரவர் இல்லம்முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகள்முன்பாக 20-ம் தேதி காலை கருப்புக்கொடி ஏற்றி, மத்திய பாஜக அரசுக்கு கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும். எதற்காக இப்போராட்டம் என்பதைவிளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x