Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

அரசுப் பணிகளில் - மகளிர் இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசியபோது, நிதி, மனிதவள மேலாண்மைத் துறைஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக அரசுத் துறை பணியிடங்கள், மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் வகையில், தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.

கரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதம் ஆனதால், நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ஊழல் தடுப்பு,கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும். அண்ணா மேலாண்மை நிலையத்தில் 2005-ல்பணியாளர்களுக்காக 6 வாடகைகுடியிருப்புகள் கட்டப்பட்டன. தற்போது கூடுதல் பணியாளர்களுக்காக அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்திலேயே ரூ.3.50 கோடியில் கூடுதல் பணியாளர் வாடகை குடியிருப்பு கட்டப்படும்.

அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை நிலையத்தில் ரூ.2 கோடியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா மேலாண்மை நிலையத்தில் மாநில, மத்திய அரசு மற்றும்பொதுத் துறை நிறுவன அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் இருந்து வரும் பயிற்சியாளர்கள், அண்ணா மேலாண்மை நிலையத்தை வந்தடையவும், அங்கிருந்துதலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பயிற்சியாளர்களின் போக்குவரத்து வசதிக்காக ரூ.40 லட்சத்தில் 2 மினி பேருந்துகள் வாங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x