Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா - எளிமையாக நடந்த பிச்சாண்டவர் வீதியுலா :

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் காட்சியளித்த சிவபெருமான். (அடுத்த படம்) காரைக்கால் கைலாசநாதர் கோயில் பிரகாரத்தில் நடைபெற்ற பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனிகளை வீசியெறிந்து வழிபட்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா உள்ளிட்டோர்.

காரைக்கால்

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் மிக முக்கியநிகழ்வான, பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா நேற்று மிகவும் எளிமையாக கோயில் பிரகாரத்தின் உள்ளேயே நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்கு உட்பட்ட காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். கரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டுகட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 21-ம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் விழா தொடங்கியது. 22-ம் தேதி கைலாசநாதர் கோயிலில் புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல்யாணம், பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை பிச்சாண்டவர், பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு, மங்களவாத்தியங்கள் முழங்க கைலாசநாதர் கோயில் பிரகாரத்துக்குள்ளேயே பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்றோர் மாங்கனிகளை இறைவனுக்கு படைத்தனர். தொடர்ந்து, மாங்கனிகளை வீசிஎறிந்து பக்தர்கள் பிடித்துச் செல்லும் நிகழ்வு சம்பிரதாய முறையில் நடத்தப்பட்டது.

பிரகார உலாவின் நிறைவில், பிச்சாண்டவரை புனிதவதி அம்மையார் எதிர்கொண்டு அழைத்துச் சென்று மாங்கனியுடன் தயிர்சாதம் வைத்து அமுது படையல் செய்யும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச்.நாஜிம்,சந்திரபிரியங்கா, நாக தியாகராஜன், சிவசங்கர், ஆறுமுகம், ரமேஷ், னிவாஸ் அசோக், அசோக் பாபு, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் ஆதர்ஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமுது படையல் நிகழ்வுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரவு பரமதத்தர் 2-வது திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இன்று (ஜூன் 25) அதிகாலை அம்மையாருக்கு சிவபெருமான் காட்சி தரும் நிகழ்வு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x