Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

பொம்மலாட்டக் கலையில் புதுமைகளை புகுத்திய காரைக்கால் கே.கேசவசாமிக்கு பத்ம விருது

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் கே.கேசவசாமிக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.கேசவசாமி(78), 36 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி, தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். பள்ளியில் மாணவர்களிடம் கற்றல் திறனை அதிகரிக்க பொம்மலாட்டக் கலை மூலம் பாடங்களை நடத்தினார். தொடர்ந்து, மக்கள் மத்தியில் இக்கலையை பரவலாக கொண்டு சென்றுள்ளார்.

பத்ம விருது அறிவிக்கப்பட்டது குறித்து கே.கேசவசாமி கூறியது: மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இக்கலைக்காக நான் பெறப்போகும் 3-வது தேசிய விருது இது. கையுறை பொம்மலாட்டம், தோல் அல்லது நிழல் பொம்மலாட்டம், கயிற்று பொம்மலாட்டம் என 3 வகைகள் உண்டு. நான் கயிற்று பொம்மலாட்டம் நிகழ்த்தி வருகிறேன்.

மரக்கட்டையில் பொம்மைகள் இருந்துவந்த நிலையில், கனமில்லாமல் மிகவும் இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக மரக்குச்சி, காகிதக் கூழ் மூலம் நானே பொம்மைகளை தயாரிக்கத் தொடங்கினேன். கை, கால்கள் மட்டும் அசையும் வகையிலே பொம்மைகள் இருந்தன. ஆனால், நான் உடல் பாகங்கள் அனைத்தும் அசையும் வகையில் பொம்மைகளை தயாரித்தேன்.

மேடையில் உயிருள்ள ஒருவர் நடித்தால் எப்படி இருக்குமோ, அத்தகைய உணர்வில் இந்த பொம்மைகளின் நடிப்பு அமைந்திருக்கும் என்பதுதான் இதன் தனிசிறப்பு. சில வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னிடம் இக்கலையையும், பொம்மைகளை தயாரிக்கவும் கற்றுச் சென்று, அந்நாடுகளில் இக்கலையை நிகழ்த்தி வருகின்றனர். இக்கலை மூலம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நடத்தியுள்ளேன். பொம்மைகளை செய்யவும், இயக்கவும் 2 நாட்களில் கற்றுக்கொள்ள முடியும். விருப்பமுடையோர் எந்தவித கட்டணமும் இல்லாமல் உணவு, தங்குமிட வசதியுடன் 5 நாட்கள் தங்கி என்னிடம் பயிற்சி பெற்றுச் செல்லலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x