Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

தமிழகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்காக மணல் தட்டுப்பாட்டை போக்க குவாரிகளை திறக்க வேண்டும் அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்கான மணல் பற்றாக்குறையை போக்கும் வகையில் அரசு மணல் குவாரிகளை உடனே இயக்க வேண்டுமென மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் 75 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என பல லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது 2 அரசு மணல் குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஆன்லைன் புக்கிங் முறையில் ஆண்டுக்கு ஒரு லாரிக்கு 3 லோடுகள் மட்டுமே மணல் கிடைக்கின்றன. தமிழகத்தில் 17 மருத்துவ கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள் கட்டுமான பணிகளும் நடைபெறுகின்றன. எனவே, தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை விரைவில் திறக்க உத்தரவிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் மணல் ஏற்றிச் செல்வதற்கு வடிவமைக்கப்பட்ட டிப்பர் லாரிகளுக்கு மட்டுமே மணல் வழங்க அரசு அனுமதிக்க வேண்டும். மணல் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக மணல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கட்டுமான தொழிலை நம்பியுள்ள 90 லட்சம்பேரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மணல் விற்பனை திட்டத்தை கைவிட்டு, மணல் குவாரிகளில் இருந்து நேரடியாக மணல் தர வேண்டும். தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமான தொழிலுக்கு 9,000 லோடு மணல் தேவைப்படுகிறது. தற்போது அளிக்கப்பட்டு வரும் மணல் போதுமானதாக இல்லை. எனவே, தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகம் முழுவதும் இருக்கும் 80 மணல் குவாரிகளை இயக்க தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x