Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னைமெரினா கடற்கரையில் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள ‘நம்ம CHENNAI’ என்ற அடையாளச் சின்னத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். இது அடையாளச் சின்னமாகத் தெரியவில்லை. மாறாக, தாய்த் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக உள்ளது. சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மெரினா கடற்கரையில் ரூ. 24 லட்சம் செலவில் ராணி மேரி கல்லூரி அருகில், சென்னையின் பெருமை, மாண்பை கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களேசுய புகைப்படம் (செல்பி) எடுத்துக்கொள்ளும் வகையில் இந்தச் சிற்பத்தை அமைத்ததாகக் கூறப்படுகிறது. இனி சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக திகழும்.
நாகரிக வளர்ச்சியில் உலகத்தோடு இணைந்து போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக மொழிக் கலப்புக்கு அரசு துணை போகக்கூடாது. தமிங்கில மொழியில் எழுதக்கூடாது. தமிழ் வளர்ச்சித் துறை என்ற துறையை உருவாக்கி, ஒரு அமைச்சர் பொறுப்புவகிக்கும் நம் மாநிலத்தில் இப்படிதமிழைச் சிதைக்கும் பணிகளில் ஈடுபடக்கூடாது. இது கண்டனத்துக்குரியது.
உலகத்தின் இணைப்பு மொழிதான் ஆங்கிலமே தவிர, தமிழ் மொழியுடன் கலப்பில் பிணையும் மொழி அல்ல என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உணர வேண்டும். சென்னையின் அடையாளமாகத் திகழும், ‘நம்ம CHENNAI’ சிற்பத்தை, ‘நம்ம சென்னை' என ஆங்கில கலப்பில்லாமல் மாற்றியமைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT