Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

கரோனா அச்சம் காரணமாக : ஓய்வுபெற்ற ரயில்வே காவலர் தற்கொலை :

திருநகர் அமைதி சோலை 3-வது தெருவைச் சேர்ந்தவர் மாரிச்சாமி(72). மதுரை ரயில்வேயில் காவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது ஒரே மகன் ராஜேந்திரன். சவுராஷ்டிரா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மாரிச்சாமி நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் நடை பயிற்சி சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் திருநகரில் உள்ள உயர் மின் கோபுரம் ஒன்றில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரிய வந்தது. மாரிச்சாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கவனித்துள்ளார். அவருக்கு அண்மையில் எடுத்த கரோனா பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்தது. இருப்பினும் அடிக்கடி உடல்நலம் பாதித்ததால் அவர் விரக்தியில் இருந்துள்ளார்.

இதற்கிடையே, அவர் வீட்டில் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில், ‘‘எனக்கு சில மாதமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று வந்துவிடுமோ என்னும் அச்சத்தில் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். போலீஸார் அக்கடிதத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x