Last Updated : 27 May, 2024 02:34 PM

 

Published : 27 May 2024 02:34 PM
Last Updated : 27 May 2024 02:34 PM

கோவை அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகள் உள்பட மூவர் உயிரிழப்பு

மணிகண்டன், தமிழ்செல்வி, புவனா | கோப்புப் படங்கள்

கோவை: கோவை அருகே குளிக்கச் சென்றபோது குட்டையில் மூழ்கி தந்தை, மகள் உளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகேயுள்ள போகம்பட்டி விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). கூலித் தொழிலாளியான இவர் தனது மகள் தமிழ்செல்வி (15), தனது சகோதரர் மகள் புவனா (13) ஆகியோருடன் போகம்பட்டியில் உள்ள ஒரு குட்டைக்கு குளிக்கச் சென்றார். ஆனால், குளிக்கச் சென்ற மூவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அந்த குட்டைக்குச் சென்று பார்த்தனர். அப்போது குட்டை அருகே, காலணிகள் மற்றும் உடைகள் இருந்தன.

குட்டையில் பார்த்தபோது, தமிழ்செல்வியின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சுல்தான்பேட்டை போலீஸார் மற்றும் சூலூர் தீயணைப்புத் துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் குட்டையில் இறங்கி பார்த்தனர். அப்போது, மணிகண்டன், புவனா ஆகியோரது சடலங்களும் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன.

குட்டையில் குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதிக்குச் சென்றதால், நீச்சல் தெரியாமல் மூவரும் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தமிழ்செல்வி, சுண்டபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். புவனா போகம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x