Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர்,நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியவானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 2 நாட்களுக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
13-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி,காரைக்கால் மாவட்டங்களில்ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இடைவெளிவிட்டு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT