Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

இங்கிலாந்துக்கு எதிரான டி 20, ஒருநாள் தொடர் தமிழக அணியில் இருந்து நடராஜன் விடுவிப்பு பிசிசிஐ கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

நடராஜன்

சென்னை

அடுத்த மாதம் நடைபெற உள்ளஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரை கருத்தில் கொண்டு பிசிசிஐ கேட்டுக்கொண்டதற்கிணங்க விஜய்ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறுகையில் “இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்மற்றும் டி20 தொடரை கருத்தில் கொண்டு தமிழக வீரர் நடராஜன் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென பிசிசிஐ அமைப்பும், இந்திய அணி நிர்வாகமும் விரும்புகின்றன. இந்திய அணியின் நலனை கருத்தில் கொண்டு இதற்கு நாங்களும் சம்மதித்துவிட்டோம். இதனால் தமிழக அணியில் இருந்து நடராஜனை விடுவித்துள்ளோம்'' என்றார்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நடராஜன் அறிமுகமாகி சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்ஹசாரே கோப்பையில் நடராஜனுக்கு பதிலாக ஆர்.எஸ்.ஜெகநாத் சேர்க்கப்பட்டுள்ளார்.

வரும் 20-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்காக தமிழக அணி 13-ம் தேதி இந்தூருக்குப் புறப்பட்டுச் செல்கிறது. சையது முஸ்டாக் அலி டி 20 கோப்பையை சமீபத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழகஅணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் மார்ச் 12-ம் தேதி அகமதாபாத்திலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 23-ம் தேதி புனேயிலும் தொடங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x