Published : 21 Dec 2020 03:14 AM
Last Updated : 21 Dec 2020 03:14 AM

அதிகார மோதலால் பிரதமர் சர்மா ஒளி பரிந்துரை நேபாள நாடாளுமன்றம் திடீர் கலைப்பு

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளியின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து குடியரசுத் தலைவர் பித்யா தேவி நேற்று உத்தரவிட்டார். நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்அதிகார மோதல் உச்சத்தைஎட்டியதை அடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளிக்கும், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் பிரச்சந்தாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வந்தது. கரோனா வைரஸ் பரவலை எதிர்கொண்ட விதம், நேபாளத்தின் புதிய வரைபடத்தை திரும்பப் பெற்ற முடிவு என பல விவகாரங்களில் பிரதமர் சர்மா ஒளியை பிரச்சந்தா விமர்சித்து வந்தார். இதனால், ஆளும் கட்சிக்குஉள்ளேயே பிரதமரின் ஆதரவாளர்கள், பிரச்சந்தாவின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அரசமைப்பு சாசனக் குழு தொடர்பாக பிரதமர் சர்மா ஒளி, அண்மையில் கொண்டு வந்த அவசர சட்டமானது ஆளும் கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியது. இந்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி பிரச்சந்தாவின் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தினர். பிரதமர் பதவியில் இருந்து சர்மா ஒளி விலக வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழலில், பிரதமர் சர்மா ஒளி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், அதிருப்தி எம்.பி.க்களை சமாதானப்படுத்தும் உத்தி குறித்து ஆலோசிக்கப்படும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்த்திராத வகையில் நாடாளுமன்றத்தை கலைக்க கோரி குடியரசுத் தலைவருக்கு சர்மா ஒளி பரிந்துரைத்தார்.

மேலும், குடியரசுத் தலைவர்மாளிகைக்கு நேரில் சென்றும் இதுதொடர்பான கடிதத்தை வழங்கினார். பிரதமரின் பரிந்துரையை ஏற்று, நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரிநேற்று உத்தரவிட்டார். நேபாள நாடாளுமன்றத்துக்கான அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 30-ம்தேதி தொடங்கி மே 10-ம் தேதிவரைநடைபெறும் என குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x