Published : 01 Jun 2023 05:20 AM
Last Updated : 01 Jun 2023 05:20 AM

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 1) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (ஜூன் 1, 2) சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, வரும் 3, 4-ம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

மே 31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக

கடலூர் மாவட்டம் வேப்பூரில் 9 செ.மீ. காட்டுமயிலூரில் 8 செ.மீ. நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், ஜூன் 2-ம் தேதி மேற்கூறிய பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x