Published : 01 Jun 2023 04:39 AM
Last Updated : 01 Jun 2023 04:39 AM

சிங்கப்பூர் - மதுரை இடையே கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும்: மத்திய அமைச்சர் சிந்தியாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். முன்னதாக, டோக்கியோ விமான நிலையத்தில் அவரை ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் வழியனுப்பி வைத்தார்.

சென்னை: டோக்கியோ- சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதுடன், சிங்கப்பூர்-மதுரை இடையிலான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அரசு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்தேன்.

ஜப்பான்-இந்தியா முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டாண்மைத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரங்களில் 3 தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஜப்பானில் கணிசமான புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளனர். சுற்றுலா வடிவிலும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவு வளர்ந்து வருகிறது.

தற்போது சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவை இல்லை. 2019 அக்டோபரில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது.

கரோனா தொற்று காலத்தில் இது நிறுத்தப்பட்டது. நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னை -டோக்கியோ இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகியுள்ளது. சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன.

வரும் 2024, ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகம் நடத்த உள்ள நிலையில், ஜப்பானிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்த்திட ஏதுவாக, நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர். சிங்கப்பூர் மற்றும் சென்னை, திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூர் - கோவை இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சிங்கப்பூர்-மதுரை இடையே வாரம் மூன்று முறை மட்டுமே விமானச் சேவை உள்ளது. சிங்கப்பூர்- மதுரை இடையில் அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம், என்னை சந்தித்தபோது தெரிவித்தார். இதே கோரிக்கையை, அங்குள்ள தமிழ் மக்கள் பலரும் முன்வைத்தனர். எனவே, சிங்கப்பூர் - மதுரை இடையில் அதிக விமானங்களை இயக்க பரிசீலிக்க வேண்டும்.

டோக்கியோ- சென்னை இடையில் நேரடி விமான இணைப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். சிங்கப்பூர் - மதுரை இடையே விமானங்களின் எண்ணிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தினசரி விமானமாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x