Published : 01 Jun 2023 05:07 AM
Last Updated : 01 Jun 2023 05:07 AM

மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - லஞ்ச ஒழிப்பு டிஜிபி எச்சரிக்கை

சென்னை: மின்வாரிய சேவைகளை வழங்குவதற்கு, நுகர்வோரிடம் லஞ்சம் வாங்கினால், அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி வன்னிய பெருமாள் எச்சரித்துள்ளார்.

நுகர்வோருக்கு மின் இணைப்பு வழங்குதல், மின்விநியோக பாதையில் ஏற்படும் பழுதுகளை நீக்கி சீரான மின்விநியோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தமிழ்நாடு மின்வாரியம் வழங்கி வருகிறது. இதில், மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட சேவைகளை பெற உரிய கட்டணம் தவிர, அதிகாரிகள், ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பதும் பரவலாக நடைபெறுகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் அதிக அளவில் பணம் எதிர்பார்ப்பதாகவும், சாதாரண சேவைகளுக்கே பணம் கேட்பதாகவும் நுகர்வோரிடம் இருந்து மின்வாரியத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன.

இதையடுத்து, மின்வாரிய சேவைகளுக்கு லஞ்சம் பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி வன்னிய பெருமாள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மின்வாரிய சேவைகளை வழங்குவதற்கு, ஒருசில அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்பதும், வாங்குவதும் வழக்கத்தில் உள்ளதாக மின்வாரியத்துக்கு புகார் வந்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ புகார்கள் கிடைக்கப்பெற்றால், அதை உடனே அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க தலைமை மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x