Published : 12 Apr 2023 08:36 PM
Last Updated : 12 Apr 2023 08:36 PM

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகள்‌ கண்டறிந்து மூடப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.12) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தன் துறையின் கீழ் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:

  • மறுவாழ்வு நிதி: கள்ளச்சாராயம்‌ காய்ச்சுதல்‌ மற்றும்‌ கள்ள மதுபான விற்பனையில்‌ ஈடுபட்டு மனம்‌ திருந்தியவர்களின்‌ மறுவாழ்வுக்காகவும்‌, அவர்கள்‌ மீண்டும்‌ இத்தகைய நடவடிக்கைகளில்‌ ஈடுபடாமல்‌ வேறு தொழில்களை மேற்கொள்ள உதவிடுவதற்காகவும்‌ ரூ.5 கோடியில் மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படும்‌.
  • மது அருந்துதலுக்கு எதிரான விழப்புணர்வுப்‌ பிரச்சாரத்துடன்‌ போதை மருந்துகளை தவறான பயன்பாட்டிற்குப்‌ பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வுப்‌ பிரச்சாரத்தையும்‌ இணைந்து மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌. எரிசாராயம்‌, போலி மதுபானம்‌, பிற மாநிலங்களில்‌ இருந்து மதுபானம்‌ கடத்துதல்‌ மற்றும்‌ கடத்தலுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌
  • வாகனங்கள்‌ குறித்து தகவல்கள்‌ தரும்‌ உளவாளிகளுக்கு வழங்கப்படும்‌ வெகுமதித்‌ தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்‌.
  • எரிசாராயம்‌, போலி மதுபானம்‌ மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ இருந்து கடத்தப்படும்‌ மதுபான பாட்டில்கள்‌ ஆகியவற்றைக்‌ கைப்பற்றுவதில்‌ பெரும்‌ பங்கு வகிக்கும்‌ காவல்‌ ஆளிநர்களை ஊக்குவிக்கும்‌ பொருட்டு வழங்கப்படும்‌ ஊக்கத்தொகையை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்‌.

தொகுப்பூதியம் உயர்வு: தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழக மதுபான சில்லறை விற்பனைக்‌ கடை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்‌ தொகுப்பூதியத்தினை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100/-ம்‌, விற்பனையாளர்களுக்கு ரூ.930-ம்‌, மற்றும்‌ உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.840/-ம்‌ மாதந்தோறும்‌ கூடுதலாக உயர்த்தி 01.04.2023 முதல்‌ வழங்கப்படும்‌.

  • தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழக மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ தவறான நோக்கத்தில்‌ வரும்‌ நபர்களை அடையாளங்கண்டு தவறுகளை தடுத்திட இந்த நிதியாண்டில்‌ 500 மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள்‌ ரூ.16.00 கோடி செலவில்‌ பொருத்தப்படும்‌.
  • தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழக மதுபான சில்லறை விற்பனைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ இதர அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ குடும்ப நல நிதி (குழுக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌) உதவித்‌ தொகை ரூ.3 லட்சத்தில்‌ இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழக மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ பணப்‌ பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவப்படும்

தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தில்‌ 31.03.2023 அன்றுள்ளபடி 5,329 மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகள்‌ செயல்பட்டு வருகின்றன. இதில்‌, தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகள்‌ கண்டறியப்பட்டு மூடப்படும்‌.

வருவாய் எவ்வளவு? - 2022-2023-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவை மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது.

2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.44,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,050 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.8,000 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x