Published : 23 Feb 2023 06:07 AM
Last Updated : 23 Feb 2023 06:07 AM

புதுச்சேரி | மனஅழுத்தம் அதிகரித்தால் கலந்தாய்வு எடுக்க தயங்காதீர்: திருபுவனையில் நடந்த காவலர் நலக்கூட்டத்தில் அறிவுரை

புதுச்சேரி: புதுவை தன்வந்தரிநகர் காவல் நிலைய காவலர் நாகராஜ். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் பணி முடித்து வீட்டுக்கு சென்றார். அப்போது குடும்ப பிரச்சினையால் வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதேபோல் புதுவை மடுகரை இந்திராநகரைச் சேர்ந்தவர் மலையராஜ் (48). இவர் கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைப்பாட்டால் மனமுடைந்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

திருபுவனையில் தனியார் மண்டபத்தில் காவலர் நலக்கூட்டம் நடந்தது. 2 காவலர்கள் தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் நலக்கூட்டத்தை நடத்த வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து கண்காணிப்பாளர்களுக்கும் விரிவாக அறிக்கையை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து திருபுவனையில் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த காவலர் நலக்கூட்டத்தில் எஸ்பி வம்சிரெட்டி மற்றும் மேற்கு பகுதி போலீஸார் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மனநல மருத்துவர் வெங்கட்ராமன் பேசுகையில், "குடி பழக்கம் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மனஅழுத்ததால் நெஞ்செரித்தல், குடல் புண் இருக்கும். உடல் உழைப்பு குறைவாக இருந்தால் தொப்பை உருவாகும். நீரழிவு, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட முதலில் உணவுக்கட்டுப்பாடு, நடைபயிற்சி தேவை " என்றார். பயிற்சிக்கு பிறகு எஸ்பி வம்சிரெட்டி கூறுகையில், "மனஅழுத்தம், கோபம் இருந்தாலும் அதை மேலாண்மை செய்ய கற்பது அவசியம். மனஅழுத்ததில் நேர்மறை, எதிர்மறை உள்ளது.

சில இடங்களில் மனஅழுத்தம் நேர்மறையை தரும். ஆனால் எதிர்மறை மனஅழுத்தம் பாதிப்பை தரும். தற்போது பணியில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதால் பணிசுமை அதிகரிக்கிறது. இதனால் 20 மணி நேரம் பணி தந்தால் அடுத்த நாள் ஓய்வு தர ஏற்பாடு செய்கிறோம்.

மனஅழுத்தம் ஏற்பட்டால் நம்மை யாரும் கேலி செய்வார்கள் என்று அதனை தவிர்க்கக்கூடாது. இதற்காக கலந்தாய்வு எடுக்க தயங்காதீர். மேலதிகாரியிடம் சொல்லுங்கள். மன அழுத்தத்தை சரி செய்ய முடியும். தற்கொலை எண்ணம் ஏற்படாமல் தடுக்க முடியும் " என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x