Published : 22 Feb 2023 07:20 PM
Last Updated : 22 Feb 2023 07:20 PM

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோப்புப்படம்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.-க்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிந்துள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், இந்தச் சம்பவம் குறித்து 6 வாரங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

பின்புலம் என்ன? - விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். இங்கு தங்கியிருந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்தபுகாரின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 10-ம் தேதி காவல்துறையினரும், வருவாய் துறையினரும் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அன்பு ஜோதி ஆசிரமம் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. தொடர் விசாரணையில் ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

20-க்கும் மேற்பட்டோர் மாயம்: மேலும் ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேரை கெடார் காவல்நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 13 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி அன்பு ஜோதி ஆசிரமத்தில், விழுப்புரம் சிபிசிஐடி எஸ்பிஅருண் பாலகோபாலன் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார், மண்டல தடய அறிவியல் துறையின்துணை இயக்குநர் சண்முகம் ஆகியோர் நேற்று சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.

3 மணி நேரத்துக்கும் மேலாக.. - சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இச்சோதனைக்குப் பின், முக்கிய ஆவணங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கட்டிப்போட பயன்படுத்தப்பட்ட இரும்புசங்கிலிகள், அடிக்க பயன்படுத்தப்பட்ட மூங்கில் பிரம்பு கழிகள், ரத்தம்படிந்த பாய், உடுத்திய துணிகள் மற்றும் சில மருந்து பொருட்களை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி, விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து விசாரணை

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி எஸ்பி அருண்பாலகோபாலன், “டிஜிபியின் உத்தரவுப்படி மொத்த வழக்குகளில் 4 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம். குற்றம் நடைபெற்ற இடத்தைஆய்வு செய்து, ஒருசில ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x