Published : 16 Dec 2022 06:55 AM
Last Updated : 16 Dec 2022 06:55 AM

இந்த ஆண்டின் கடைசி கூட்டத்தொடர் முடித்துவைப்பு: பொங்கலுக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டம்

சென்னை: சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை பொங்கலுக்கு பிறகு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிவடைந்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், கடந்த மே மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவுற்ற நிலையில், கடந்த அக்.17-ம் தேதி பேரவையின் மழைக்கால கூட்டம் தொடங்கியது.

அக்.18, 19 ஆகிய 2 நாட்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. பேரவை முடிவடையும் நாளில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளுக்கு தடை, ஹூக்கா பாருக்கு தடை உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், தேதி குறிப்பிடாமல் பேரவை தள்ளிவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த அக்.17-ல்கூடிய இந்த ஆண்டின் கடைசிகூட்டத்தொடரை முடித்துவைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். தமிழக அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும். ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும்.முன்னதாக, கூட்டம் நடத்துவதற்கான தேதிகளை முடிவு செய்து, ஆளுநரின் ஒப்புதல் பெறப்படும். அதன்படி கூட்டம் நடைபெறும்.

அடுத்த ஆண்டில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்தலாமா என ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x