Published : 16 Dec 2022 06:23 AM
Last Updated : 16 Dec 2022 06:23 AM

FIFA WC 2022 | காயங்களால் கலைந்த மொராக்கோ கனவு..

காயத்தால் மொராக்கோ வீரர் ரொமைன் சைஸ் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட காட்சி

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்துதொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில்நேற்று நள்ளிரவு அல்ஹோரில் உள்ளஅல் பேத் மைதானத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், மொராக்கோ அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணி முதல்கோலை அடித்து மொராக்கோவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. வலது உள்புறத்தில் இருந்து அன்டோனி கிரீஸ்மான் பந்தை கிளியான் பாப்பேவுக்கு அனுப்பினார்.

மொராக்கோ டிபன்டர்கள் அவரை சூழ்ந்திருக்க பாப்பே இலக்கை நோக்கி அடித்தஷாட் இடது புறம்திசை திருப்பப்பட்டது.அப்போது கிட்டத்தட்ட தோள்பட்டைஉயரத்துக்கு எழும்பி வந்த பந்தைலாவகமாக கட்டுப்படுத்தி அப்படியே கோல்வலைக்குள் திணித்தார் தியோ ஹர்னாண்டஸ். இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

10-வது நிமிடத்தில் மொராக்கோவின் நவுசைர் உதவியுடன் பந்தை பெற்ற அஸ்ஸெடின் ஊனாஹி, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி துல்லியமாக உதைத்தார். ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் ஹ்யூகோ லொரிஸ் வலது புறம் பாய்ந்து ஒற்றை கையால் அற்புதமாக கோல்விழ விடாமல் தட்டி விட்டார். 17-வது நிமிடத்தில் மொராக்கோவின் ஹக்கீம் ஜியேச் இலக்கை நோக்கி அடித்த பந்து மிக நெருக்கமாக விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

அடுத்த நொடியில் இப்ராஹிமா கொனாடே உதவியுடன் பந்தை பெற்ற பிரான்ஸின் ஆலிவர் ஜிரவுடு இலக்கை நோக்கி அடித்த வலுவான ஷாட் கோல் கம்பத்தின் மீது பட்டு விலகிச் சென்றது. 27-வது நிமிடத்தில் எதிரணியின் பாக்ஸ் பகுதிக்குள் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் பந்தைதொட்டார். அப்போது மொராக்கோ வீரர் சோபியான் பவுஃபால், சேலஞ்ச் செய்ய முயன்ற போது தியோ ஹர்னாண்டஸ் காலை இடித்து விட்டார்.

இதனால் களநடுவர் சோபியானுக்கு மஞ்சள் அட்டை வழங்கினார். நடுவரின் இந்தமுடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. 44-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து மொராக்கோவின் ஜவாத் எல் யாமிக், ‘பை-சைக்கிள் கிக்’ முறையில் இலக்கைநோக்கி வலுவாக அடித்தார். ஆனால் பிரான்ஸ் அணியின் கோல் கீப்பர் அதை அற்புதமாக தடுத்துவிட்டார். முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது.

79-வது நிமிடத்தில் கிளியான் பாப்பே,மொராக்கோ அணியின் டிபன்டர்களுக்குபோக்குக்காட்டி மார்க் செய்யப்படாமல் இருந்த ராண்டல்கோலோ முவானிக்கு பந்தை தட்டி விட்டார். அவர், அதைஎளிதாக கோல் வலைக்குள் தட்டிவிட பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் மொராக்கோ அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் வரும் 18-ம் தேதி இருமுறை சாம்பியனான அர்ஜெண்டினாவுடன் பலப்பரீட்சைநடத்துகிறது நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி. முன்னதாக 17-ம் தேதி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மொராக்கோ, குரோஷியாவுடன் மோதுகிறது.

பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 4-வது முறையாகும். இறுதிப் போட்டியில் அந்த அணி வென்றால், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையை படைக்கும். இந்த வகையில் பிரேசில் அணி 1962-ல் சாதனை படைத்திருந்தது.

காயங்களால் கலைந்த கனவு..: மொராக்கோ அணிக்கு முன்னணி வீரர்களின் காயங்கள் கடும் பின்னடைவை கொடுத்தது. பிரான்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக கடைசி நிமிடத்தில் மொராக்கோவின் டிபன்டர் நயீஃப் அகுர்ட் காயம் காரணமாக விலகினார். கேப்டன் ரோமெய்ன் சைஸ் 21 நிமிடங்கள் மட்டுமே களத்தில் இருந்த நிலையில் காயத்தால் வெளியேறினார். இரு முக்கியமான வீரர்கள் விளையாடவில்லை என்பதால் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் மொராக்கோவின் கனவு கலைந்தது.

4-வது முறையாக...: பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 4-வது முறையாகும். இறுதிப் போட்டியில் அந்த அணி வென்றால், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையை படைக்கும். இந்த வகையில் பிரேசில் அணி 1962-ல் சாதனை படைத்திருந்தது.

முக்கியமான படி…: பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் கூறும்போது, “இந்த நேரத்தில் உணர்ச்சியும் பெருமிதமாகவும் இருக்கிறது. எங்களுக்கு இந்த ஆட்டம் மற்றொரு முக்கியமான படியாக இருந்தது. இறுதிப் போட்டி அடுத்த படிக்கட்டாக இருக்கும். நாங்கள் ஒரு மாதமாக ஒன்றாக இருந்தோம். இது ஒருபோதும் எளிதானது அல்ல. கத்தாரில் இதுவரை மகிழ்ச்சியாக இருந்தோம். அதற்கான வெகுமதி வீரர்களுக்கு கிடைத்துள்ளது” என்றார்.

பாராட்டிய அதிபர்: கத்தார் உலகக் கோப்பையில் பிரான்ஸ் – மொராக்கோ அணிகள் மோதிய அரை இறுதி ஆட்டத்தை பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரான் நேரில் கண்டுகளித்தார். போட்டி முடிவடைந்ததும் வீரர்களின் அறைக்கு நேரில் சென்ற மக்ரான், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x