Published : 20 Sep 2022 04:10 PM
Last Updated : 20 Sep 2022 04:10 PM

இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்த்த வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க கோரி இடைக்கால கோரிக்கையும் அந்த மனுவில் வைத்துள்ளேன்.

இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை, இடைக்காலப் பொதுச் செயலாளர் தேர்வு குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்ககூடாது. கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 3,4,5,6 மற்றும் 7-வது தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், "கட்சியின் உறுப்பினராக இல்லாத மனுதரார் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது" என்று கூறி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நகலை சமர்பித்தார்.

அப்போது மனுதாரர் ஆஜராகி, ஏற்கெனவே இதே அமர்வு பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதால் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பு நகலை படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x