Published : 20 Sep 2022 03:20 PM
Last Updated : 20 Sep 2022 03:20 PM

எஸ்.பி.வேலுமணி வழக்குகளை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு  

எஸ்.பி.வேலுமணி | கோப்புப்படம்

சென்னை: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த வழக்கை, எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு என 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டன. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனுவை தனி நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் எனவும், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடிய ராஜு என்பவர் ஆஜராகக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வே விசாரிக்கலாம். மத்திய அரசு வழக்கறிஞான ராஜுவே ஆஜராகலாம் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க அரசுத் தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை நடத்த தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். அப்போது, எஸ்.பி். வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐயப்பராஜ், டெல்லியிருந்து மூத்த வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, முதல் அமர்வு அல்லது இரண்டாவது அமர்வு விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை தனி நீதிபதி முன் பட்டியலிட மறுத்த நீதிபதிகள், எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x