Published : 01 Jul 2022 07:33 AM
Last Updated : 01 Jul 2022 07:33 AM

தென்னிந்தியாவில் முதல்முறையாக கோவையில் திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப்’ தொடக்கம்

கோவையில் புதிதாக தொடங்கப்பட்ட ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கிளப்பின் தலைவர் திருநங்கை தன்ஷிகாவுக்கு, அதற்குரிய பிரத்யேக பதக்கத்தை வழங்கிய ரோட்டரி மாவட்டம் இளைஞர் சேவைப் பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம்.

கோவை: திருநங்கைகளின் வாழ்க்கையை மேம்படுத்த, ‘ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன்’ கிளப்பின் ஒத்துழைப்புடன், தென்னிந்தியாவிலே முதல் முறையாக திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கிளப் கோவையில் நேற்று தொடங்கப்பட்டது.

இதன் தொடக்க விழாவுக்கு ரோட்டரி கவர்னர் ராஜசேகரன் னிவாசன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டம் இளைஞர் சேவைப் பிரிவு தலைவர் காட்வின் மரியா விசுவாசம், ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கிளப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை தன்ஷிகாவுக்கு, ரோட்டரிக்கான பிரத்யேக பதக்கத்தை அணிவித்து, சுத்தியலுடன் கூடிய மணியை வழங்கினார். ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ தலைவர் திருநங்கை தன்ஷிகா கூறியதாவது:

நாட்டில் முதல் கிளப் ஒடிசாவில் தொடங்கப்பட்டது. தேசிய அளவில் இரண்டாவதாகவும், தென்னிந்திய அளவில் முதலாவதாகவும் ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளாக மாற்றத்தை உணர்பவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றனர்.

அவர்களுக்கு படிக்க வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய திருநங்கைகளுக்கு மீண்டும் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல், படிக்காத திருநங்கைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் ஏற்பாடு செய்து சமுதாயத்தில் அவர்களை மேலே கொண்டு வருதல் ஆகியவை இக்கிளப்பின் முக்கிய இலக்காகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x