Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM
சென்னை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில், சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் 12 வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அந்த அமைப்பின் புரவலர் பாரிவேந்தர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''2012 முதல் தமிழ்ப் பேராயம் விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.
விருதுக்குத் தேர்வானோர் விவரம்:
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - அ.வெண்ணிலா (கங்காபுரம்), முத்து நாகு (சுளுந்தீ). பாரதியார் கவிதை விருது - கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்). அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்). ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது - டாக்டர் பழனி (நாலடியார்).
அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது - வி.டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்). முத்துத் தாண்டவர் தமிழிசை விருது - டி.கேஎஸ் கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்). பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது - சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு). முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது - சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்). சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது - மா.பூங்குன்றன் (தென்மொழி).
தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது - மணிமேகலை மன்றம், ராஜபாளையம். அருணாசலக் கவிராயர் விருது - திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு. பாரிவேந்தர் பைந்தமிழ் விருது - பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).
விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்''.
இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.
எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் தலைவர் கரு.நாகராஜன், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT