Published : 02 May 2020 07:09 PM
Last Updated : 02 May 2020 07:09 PM

நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்தத் தளர்வும் இல்லை; தமிழக அரசு விளக்கம்

நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்தத் தளர்வும் இல்லை என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவுவதைத் தடுக்க, மே 4 முதல் ஊரடங்கைத் தொடர்ந்து அமல்படுத்த தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து, முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி நோய் தடுப்புப் பகுதிகளில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. நோய்த் தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில், மத்திய அரசால் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றார் போல தளர்வுகளை அனுமதித்துள்ளது.

இதன்படி, சிவப்பு மாவட்டப் பகுதிகளுக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, நோய் தடுப்புப் பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு நிற மாவட்டப் பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட பல தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தளர்வுகள் மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி காவல் கண்காணிப்பு எல்லைகளுக்கு மட்டும், அமைச்சரவை கூட்ட முடிவின்படி முதல்வரின் செய்தி அறிக்கையில் தெரிவித்தபடி அதிக தளர்வுகள் வழங்கப்படவில்லை.

எனவே, இந்தத் தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைப்பாடுகள் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வும் வழங்கப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x