Last Updated : 02 May, 2020 05:53 PM

 

Published : 02 May 2020 05:53 PM
Last Updated : 02 May 2020 05:53 PM

கரோனா நோயாளிகளுடன் அதிக தொடர்பில் இருந்த 44 மருத்துவப் பணியாளர்களைத் தனிமைப்படுத்தியது ஜிப்மர்

கடலூரைச் சேர்ந்த 3 பேருக்கு கரோனா உறுதியானதால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 44 மருத்துவப் பணியாளர்களை ஜிப்மர் தனிமைப்படுத்தியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த மூதாட்டி தனது உறவினர்களுடன் சென்னையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து ஜிப்மரில் சிகிச்சைக்காக வந்துள்ளார். பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.

அதையடுத்து அவரைப் பரிசோதித்ததில் மூதாட்டிக்குக் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் சிகிச்சை பெற்ற வார்டில் அவருடன் வந்த உறவினர்கள் இருவரையும் பரிசோதித்தனர். அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலேயே கரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரும் ஜிப்மரில் கரோனா பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

இச்சூழலில் புற்றுநோய் உட்பட பல்வேறு சிகிச்சைக்காக கரோனா தொற்று உறுதியான பெண் அனுமதிக்கப்பட்ட வார்டு மூடப்பட்டது.

தற்போதைய சூழல் தொடர்பாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் கேட்டதற்கு, "கரோனா வைரஸ் தொற்றுள்ளோருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அதிக தொடர்பில் இருந்த 44 மருத்துவப் பணியாளர்களை ஜிப்மர் தனிமைப்படுத்தியுள்ளது.

அத்துடன் குறைந்த அளவில் தொடர்பில் இருந்த 40 மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோரை சுய கவனிப்பில் வைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அதிக தொடர்பில் இருந்தோரை தேசிய விதிமுறைகளின் படி பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளோம்.

தற்போது அவசர சிகிச்சை, உட்புற மருத்து சேவை தருகிறோம். வெளிப்புற நோயாளிகளுக்குத் தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை தருகிறோம். மருத்துவ நிபுணர்களுடன் 0413 2298200 என்ற எண்ணை அழைக்கலாம்" என்று தெரிவித்தார்.

மன அழுத்தத்தால் கரோனா சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் மயக்கம்

இச்சூழலில் புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் இன்று பரிசோதனை செய்து கொண்டிருந்தபோதே மயக்கமடைந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். கரோனா பிரிவில் தொடர்ந்து பணியாற்றுவதால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மயக்கம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக மற்றொரு சிறப்பு மருத்துவர் நியமிக்கப்பட்டு பரிசோதனைப் பணிகள் நடப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x