Published : 31 Jul 2019 12:29 PM
Last Updated : 31 Jul 2019 12:29 PM
மதுரை மாவட்ட மைய நூலகத்தில் புத்தகங்களை வைக்க குடோன் வசதியில்லாததால், வாசகர்கள் அமர்ந்து படிக்கும் இடங்களிலும், நடைபாதைகளிலும் அடுக்கி வைத் துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், மாவட்ட மைய நூலகம், கிளை நூலகம் கிராமப்புற நூலகம் உட்பட 133 நூலகங்கள் உள்ளன. இதில், மாவட்ட நூலகம் சிம்மக்கல்லில் உள்ளது. இந்த நூலகத்தின் முதல் தளம் புத்தகங்கள் வைப்பதற்கான குடோனாக இருந்தது. சுமார் 4,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த இடத்தில் நாட்டுப்புற நூலகம் அமைக்கும் பணி நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கான புத்தகங்களும், மாவட்ட நூலகத்துக்குத்தான் அனுப்பி வைக்கப்படும். அவை, முதல் தளத்தில் உள்ள குடோனில் வைக்கப்படும். அப்புத்தகங்களை ஊழியர்கள் பிரித்து, ஒவ்வொரு நூலகத்துக்கும் அனுப்புவர். ஆனால், தற்போது குடோன் இன்றி 500 பதிப்பகங்களில் இருந்து வந்த புத்தகங்களை வைக்க இடமின்றி, வாசகர் படிக்கும் அறையிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதனால், வாசகர்கள் படிக்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.
மாவட்ட மைய நூலகத்தில் இளைஞர்களுக்கு அரசு வேலைக் கான டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பு நடந்தது. தற்போது இடப்பற்றாக்குறை காரணமாக அந்தப் பயிற்சி வகுப்பும் நடைபெறவில்லை.
இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே போல், மாதத்துக்கு ஒருமுறை கூடும் வாசகர் வட்டமும், போதி இடவசதியில்லாததால் கடந்த 6 மாதங்களாக நடை பெறவில்லை. புத்தகங்களை வைக்கவும், வாசகர்கள் படிக்கவும் இடமில்லாமல் மாவட்ட மைய நூலகத்தின் செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நூலக ஊழியர்கள் கூறியதாவது:
குடோன் இல்லாததால் புத்தகங்களை வைக்க இடமில்லை. அதனால், கிடைக்கும் இடங்களில் அடுக்கி வைத்துள்ளோம். அரசு பணிகளுக்கான டிஎன்பிஎஸ் பயிற்சி வகுப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். வாசக ர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க வளாகத்தில் போதிய இடமில்லை. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நூலகத்தில் வாசகர்கள் எண் ணிக்கை குறையும் அபாயம் உள்ளது.
அதனால், கூடுதல் கட்டிட வசதியை ஏற்படுத்த வேண்டும். அல்லது விசாலமான இடத்துக்கு நூலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT